குமரியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் 500 பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்களுக்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்...
குமரியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் 500 பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்களுக்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல் படுத்தி வருகிறது. கொரோனா தொற்று குறைய, குறைய ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் 10-ம் தேதி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு வசதியாக மே மாதம் 22 மற்றும் 23-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு முற்றிலும் பஸ் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவடைய இருந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழாவது முறையாக வருகிற 5-ந் தேதி வரை மேலும் பல தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் பஸ் போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் பஸ் போக்குவரத்து நாளை முதல் தொடங்குகிறது. இதுபோல குமரி மாவட்டத்திலும் பஸ் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.
இதற்காக குமரி மாவட்டத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் அனைத்திலும் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. பஸ்களை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியும், பஸ்களை பரிசோதனை ஓட்டமாக இயக்கிப் பார்ப்பதும், பழுதுகளை சரிபார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் வெறிச்சோடி கிடந்த பணிமனைகள் அனைத்தும் நேற்று முதல் பரபரப்பாகியுள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவின் பேரில் நாளை முதல் குமரி மாவட்ட பகுதிகளுக்கும், வெளிமாவட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஆனால் அரசு குறிப்பிட்டுள்ளபடி கொரோனா தொற்று அதிகம் உள்ள கோவை, திருப்பூர், சேலம், தஞ்சை, நாகை, உள்ளிட்ட 11 மாவட்ட பகுதிகளுக்கு பஸ்களை இயக்க மாட்டோம். குமரி மாவட்டத்திலிருந்து நெல்லை, பாபநாசம், தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்தில் மொத்தமுள்ள 760 பஸ்களில் முதல் நாளில் 500 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். பிறகு பயணிகள் கூட்டத்தை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதுதொடர்பாக கண்டக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 3 பேர் அமரும் இருக்கையில் இரண்டு பேரும், இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பஸ் பயணத்தின் போது பின்பற்றப்படும்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் தற்போது காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. நாளை முதல் பஸ் போக்குவரத்து தொடங்க இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் காய்கறி சந்தையை அகற்றி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
No comments