குளச்சல் அருகே ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்த விபத்தில் மீனவர் பலியானார். கடலில் தத்தளித்த 9 பேர் படுகாயத்துடன் நீந்தி கரை சேர்ந்தனர்...
குளச்சல் அருகே ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்த விபத்தில் மீனவர் பலியானார். கடலில் தத்தளித்த 9 பேர் படுகாயத்துடன் நீந்தி கரை சேர்ந்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
குமரி மாவட்டம் குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்தவர் ஆண்டனி. இவர் சொந்தமாக வள்ளம் (படகு) வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய வள்ளத்தில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று கரைமடி வலையை விரித்து விட்டு கரைக்கு திரும்புவது வழக்கம்.
அதன்படி நேற்று அதிகாலையில் குளச்சல் அல்போன்சாள் காலனியை சேர்ந்த வரீது (வயது80), துறைமுக தெருவை சேர்ந்த சூசைநாயகம் (70), பனியடிமை (60) உள்பட 10 பேர் சேர்ந்து ஆன்டணியின் வள்ளம் மூலம் கடலுக்கு புறப்பட்டனர்.
அவர்கள் காலை 6.30 மணியளவில் கடலுக்குள் வலையை விரித்து விட்டு கரைக்கு திரும்புவதற்காக வள்ளத்தில் வந்து கொண்டிருந்தனர்.
கரையை நெருங்கிய சமயத்தில் திடீரென ராட்சத அலை எழுந்தது. இதில் சிக்கிய வள்ளம் கடலில் திடீரென கவிழ்ந்தது. இதனால் 10 மீனவர்களும் வள்ளத்தின் கீழ்பகுதியில் சிக்கி தத்தளித்தனர். இதில் வரீது மட்டும் படுகாயத்துடன் மயங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் எழுந்த மற்றொரு ராட்சத அலையால் கவிழ்ந்த வள்ளம் நிமிர்ந்தது.
இதையடுத்து வள்ளத்தின் கீழ் சிக்கிய சக மீனவர்கள் உடனே வரீதை மீட்டு நீந்தியபடி கரை சேர்ந்தனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரீது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த 9 மீனவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுபற்றி குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வரீதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன வரீதுக்கு மரிய கிரேசி என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்ததில் மீனவர் பலியான சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
No comments