அய்யா வைகுண்டசாமியின் 188-வது அவதார தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தல...
அய்யா வைகுண்டசாமியின் 188-வது அவதார தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.

2 இடங்களில் இருந்தும் புறப்பட்ட பக்தர்கள் இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அய்யா வழி பக்தர்களின் சமய மாநாடு நடந்தது. மாநாட்டில் அய்யா வழி பிரமுகர்கள் பங்கேற்று பேசினர். இதில் பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது.
தொடர்ந்து அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்க இரவில் இருந்தே நாகராஜா கோவில் திடலில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
ஊர்வலத்துக்கு பாலஜனாதிபதி தலைமை தாங்கிச் சென்றார். மலர்களால் அலங் கரிக்கப் பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் செல்ல அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றனர்.
காவி உடை அணிந்தபடி கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகர அரகரா என்ற பக்தி கோஷத்தை எழுப்பியவாறு சென்றனர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக் குடம் சுமந்து சென்றனர்.
சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். அய்யா வைகுண்டரின் ஊர்வலத் துக்கு சாதி, மத பேதமின்றி வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பில் கிறிஸ்தவர்கள் கூடி வரவேற்பு அளித் தனர். பக்தர்களுக்கு பானகாரம், மோர் போன்ற நீராகாரங்களும், அன்ன தர்மங்களும் வழங்கப்பட்டன.
ஊர்வலம் சுசீந் திரம், ஈத்தங்காடு, வடக்குத் தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு பதியை அடைந்தது. அங்கு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதேபோல் பல இடங்களில் இருந்து நடைபயணமாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமிதோப்பில் குவிந்தனர். இதனால் சாமிதோப்பில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில், முத்திரிக்கிணறு போன்ற பகுதிகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நாகர்கோவில், அஞ்சு கிராமம், மார்த்தாண்டம் போன்ற இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சாமிதோப்பு பதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள பதிகள், நிழல் தாங்கல்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, பணிவிடை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வாகன பவனியும் நடந்தது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
No comments