மணவாளக்குறிச்சி அருகே இளம்பெண் முகத்தில் மயக்க பொடி தூவி 25 பவுன் நகையை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியத...
மணவாளக்குறிச்சி அருகே இளம்பெண் முகத்தில் மயக்க பொடி தூவி 25 பவுன் நகையை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருக மண்டைக்காடு, மணலிவிளையை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் (வயது 29). இவருடைய மனைவி ஸ்ரீஜா ஷாமிலி (26). இவர்களுக்கு 3 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பிரதீஷ்குமார், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார். அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று பிரதீஷ்குமாரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவரை குளச்சல் அருகே உள்ள வைத்தியசாலைக்கு பிரதீஷ்குமார் அழைத்து சென்றார். எனவே வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீஜா ஷாமிலி தனது கைக்குழந்தையுடன் இருந்தார். இந்த நிலையில் அந்த வீட்டுக்கு 2 ஆணும், ஒரு பெண்ணும் வந்துள்ளனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த அவர்கள், ஏதாவது பிச்சை போடுமா? என ஸ்ரீஜா ஷாமிலியிடம் கேட்டுள்ளனர். உடனே அவர், வீட்டில் யாரும் இல்லை, காசும் இல்லை என கூறியுள்ளார்.
ஆனாலும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. முன்பக்க கதவை பலமாக தட்டி தேங்காய், காசு ஏதாவது தாருங்கள், அப்போது தான் இங்கிருந்து கிளம்புவோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மர்மநபர்களின் செயலில் ஸ்ரீஜா ஷாமிலிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் பின்பக்க கதவை திறந்து அருகே உள்ளே உறவினர்களின் வீட்டுக்கு செல்ல முற்பட்டார்.
இதனை கவனித்த மர்மநபர்கள் அங்கு விரைந்து சென்று, ஸ்ரீஜா ஷாமிலியின் முகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மயக்க பொடி மற்றும் மயக்க மையை தடவி உள்ளனர். இதில் அவர் சுய நினைவிழந்தார்.
உடனே அவர்கள், ஸ்ரீஜா ஷாமிலி அணிந்திருந்த நகை, காப்பு, கம்மலை பறித்ததோடு வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு உடனடியாக தப்பி விட்டனர். மொத்தம் 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதற்கிடையே அங்கு வந்த உறவினர்கள் மயங்கி கிடந்த ஸ்ரீஜா ஷாமிலியை பார்த்து திடுக்கிட்டனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த துணிகர கொள்ளை பற்றி தகவலறிந்ததும் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இரணியல் பயிற்சி துணை சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அதே சமயத்தில் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ அடங்கிய தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
கொள்ளை குறித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீஜா ஷாமிலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளையடிக்க வந்த 2 ஆண்கள், 1 பெண்ணுக்கு எத்தனை வயது இருக்கும், முகமூடி அணிந்திருந்தார்களா? என விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். இளம்பெண்ணின் முகத்தில் மயக்கபொடி தூவி 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments