காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை நினைவாக நேற்று குமரி மாவட்டம் குளச்சலில் இளைஞர் காங்கிரசார் சார்பில் பேரணி நடத்த முடிவு செய்தனர். ...
காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை நினைவாக நேற்று குமரி மாவட்டம் குளச்சலில் இளைஞர் காங்கிரசார் சார்பில் பேரணி நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி குளச்சல் காமராஜர் பஸ்நிலையம் பகுதியில் இருந்து இரணியல் வரை பேரணியாக செல்ல காங்கிரசார் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் காமராஜர் பஸ்நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். அப்போது, பஸ்நிலையம் முன் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பேரணிக்கு அனுமதி அளிக்காத போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து செல்வதாக மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதற்கிடையே குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன்பு இருந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் தலைமையில் ஏராளமானோர் கொடிகள் ஏந்தியபடி திடீரென பேரணியாக புறப்பட்டனர்.
அவர்கள் அண்ணாசிலை அருகில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு சென்ற போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேரணியை தடுத்தனர். இதனால், போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.

அப்போது காங்கிரசார் பேரணிக்கு அனுமதி அளிக்காத போலீசாரை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வேனில் ஏற்ற முயன்றனர். ஆனால், காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் படுத்து கொண்டனர். அப்போது, போலீசார் காங்கிரசாரை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
ஆனால் நிலைமை கட்டுக்குள் வராததால் போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால், இளைஞர் காங்கிரசார் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரசார் 21 பேரை போலீசார் பிடித்து வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இதற்கிடையே காங்கிரசார் தாக்கியதில் சில போலீசாரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments