கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், இதே தொகுதியில் 9-வது முறையாக களம் காண்கிறா...
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், இதே தொகுதியில் 9-வது முறையாக களம் காண்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க. கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா கட்சி சார்பில் இந்த தொகுதியின் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை அந்த கட்சி நேற்று அறிவித்தது. மண்ணின் மைந்தரான இவர் இந்த தொகுதியில் ஏற்கனவே 8 முறை போட்டியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முன்பு நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி என்ற பெயரில் இருந்தது. அப்போது 1991, 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி என்று பெயர் மாற்றப்பட்டபிறகு 2014, 2019 ஆகிய ஆண்டுகளிலும் ஆக 8 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டார். 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 3 லட்சத்து 7 ஆயிரத்து 319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி மந்திரிசபையில் இவர் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை மந்திரியாகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.
2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதனால் மத்தியில் அமைந்த பா.ஜனதா கூட்டணி மந்திரிசபையில் தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாகவும், நிதித்துறை மற்றும் துறைமுகத்துறை இணை மந்திரியாகவும் பதவி வகித்தார்.
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் மறைந்த எச்.வசந்தகுமாரும் போட்டியிட்டனர். இதில் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
எச்.வசந்தகுமார் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொகுதியில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் 9-வது முறையாக பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் ராமவர்மபுரம் எஸ்.எல்.பி. தெற்கு ரோட்டில் வசித்து வரும் இவருடைய சொந்த ஊர் ராஜாக்கமங்கலம் அருகில் உள்ள அளத்தங்கரை ஆகும். பொன்னையா அய்யப்பன்- தங்ககனி தம்பதியருக்கு 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி மகனாக பிறந்தார். வக்கீலுக்கு படித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன் தனது பள்ளிப்படிப்பை நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மற்றும் டி.வி.டி. மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி படிப்பை விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியிலும், சென்னை சட்டக்கல்லூரியிலும் பயின்றார். விவசாய தொழில் செய்து வருகிறார். திருமணமாகாதவர்.
1979-ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். 1987-ம் ஆண்டு இந்து முன்னணி மாவட்ட தலைவர் மற்றும் மாநில இணை ஒருங்கிணைப்பாளராகவும், 1993-ம் ஆண்டு குமரி மாவட்ட பா.ஜனதா தலைவராகவும், 1995-ம் ஆண்டு பா.ஜனதா மாநில செயலாளராகவும், 1997-ம் ஆண்டு பா.ஜனதா மாநில பொதுச்செயலாளராகவும், 2006-ம் ஆண்டு பா.ஜனதா மாநில துணைத்தலைவராகவும், 2009-ம் ஆண்டு பா.ஜனதா மாநில தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
No comments