Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மதம் காரணமாக எவரும் பின்னுக்கு தள்ளப்படமாட்டார்கள்: அலிகர் முஸ்லிம் பல்கலையில் மோடி பேச்சு

ஒருவரின் மதம் காரணமாக யாரும் பின்னுக்குத் தள்ளப்படமாட்டார்கள் என்பதே அனைவருக்குமான வளர்ச்சியின் அடிப்படை என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ...

ஒருவரின் மதம் காரணமாக யாரும் பின்னுக்குத் தள்ளப்படமாட்டார்கள் என்பதே அனைவருக்குமான வளர்ச்சியின் அடிப்படை என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தேசிய இலக்குகளை அடைவதற்கு, அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைக்கவேண்டும்" என்றார்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் நினைவாக ஒரு தபால் தலையையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
 
"நாட்டின் மீது அக்கறையுள்ள ஒருவரின் முதல் மற்றும் முக்கிய கடமை, சாதி, இனம், மதம் என எந்த பாகுபாடின்றி, அனைத்து மக்களின் நலனுக்கு பணியாற்றுவதே என சர் சய்யத் கூறியதை நினைவுகூர்கிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகள் உறுதி செய்யப்படும் பாதையில் நாடு முன்னேறி வருகிறது; ஒருவரின் மதம் காரணமாக யாரும் பின்னுக்கு தள்ளப்படமாட்டார்கள். இதுதான் அனைவருக்குமான வளர்ச்சியின் அடிப்படை. 
40 கோடி மக்களுக்கு வங்கி கணக்குகள், எந்தவித பாகுபாடும் இன்றி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு, எந்தவித பாகுபாடின்றி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. 8 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், எந்தவித பாகுபாடின்றி, கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர். சுமார் 50 கோடி மக்கள், எந்தவித பாகுபாடின்றி, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். நாட்டின் வளங்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானவை. இதன் பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்த புரிதலுடன்தான் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

புதிய இந்தியாவின் தொலைநோக்கு தேசத்தின், சமூகத்தின் வளர்ச்சியை ஓர் அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது என்று கருதுகிறது. தவறாக வழிநடத்தும் பிரசாரத்துக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும், ஒருவரின் மனதில் நாட்டு நலன்தான் முக்கியமாக இருக்க வேண்டும். அரசியல் காத்திருக்க முடியும்; ஆனால், ஏழைகள் காத்திருக்க முடியாது. நாம் நேரத்தை வீணடிக்க முடியாது. தற்சார்பு இந்தியாவுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தேசிய இலக்குகளை அடைவதற்கு, அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைக்க வேண்டும். 
கொரோனா தொற்று நேரத்தில் சமூகத்துக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் இதுவரை இல்லாத அளவுக்கு தனது பங்களிப்பு செய்துள்ளது. மக்களை இலவச பரிசோதனைகளை மேற்கொள்ள வைத்தது, தனிமைப்படுத்தும் வார்டுகள் மற்றும் பிளாஸ்மா வங்கிகளை உருவாக்கியது மற்றும் பிரதமரின் நல நிதிக்கு மிகப் பெரிய தொகையை வழங்கியது ஆகியவை சமூகத்திற்கான உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் தீவிரத்தை காட்டுகிறது. இதுபோன்ற ஒருங்கிணைந்த முயற்சிகளால், இந்தியா கொரோனா தொற்றுக்கு எதிராக வெற்றிகரமாக போராடி, நாட்டை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. 

கடந்த 100 ஆண்டுகளில், உலகின் பல நாடுகளுடன், இந்தியாவின் உறவை வலுப்படுத்த அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் பணியாற்றியுள்ளது. உருது, அராபிக், மற்றும் பெர்சிய மொழிகளில் இங்கு செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி, ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளுடன், இந்தியாவுக்கு உள்ள கலாசார உறவுக்கு புதிய சக்தியை அளிக்கிறது. பல்கலைக்கழகத்தின் திறமையை மேலும் மேம்படுத்துவதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கடமையை நிறைவேற்றும் இரட்டை பொறுப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்ளது. 

ஒரு காலத்தில் கழிவறைகள் பற்றாக்குறை காரணமாக, முஸ்லிம் மாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்துவது 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு தனி கழிப்பறைகளை இந்த அரசு கட்டியது. 
தற்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்துவது 30 சதவீதமாக குறைந்துள்ளது. பள்ளி கல்வியை பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கான சிறப்புப் படிப்புகளை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் நடத்துவது பாராட்டுக்குரியது. முஸ்லிம் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் மேம்பாட்டில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. கடந்த 6 ஆண்டுகளில், சுமார் ஒரு கோடி முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை இந்த அரசு வழங்கியுள்ளது. பாலின அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்க கூடாது, ஒவ்வொருவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும், நாட்டின் வளர்ச்சியின் பயனை ஒவ்வொருவரும் பெற வேண்டும். 

முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வந்து, நவீன முஸ்லிம் சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளை நாடு முன்னெடுத்தது. ஒரு பெண் கல்வி கற்றவராக இருந்தால், ஒட்டு மொத்த குடும்பமே கல்வி கற்றதாகிவிடும் என முன்பு கூறப்பட்டது. கல்வி தன்னுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை கொண்டு வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு தன்னுடன் பொருளாதார சுதந்திரத்தை கொண்டு வருகிறது. பொருளாதார சுதந்திரத்தில் இருந்துதான் மேம்பாடு வருகிறது. அதிகாரம் பெற்ற பெண் ஒருவர், ஒவ்வொரு முடிவிலும், ஒவ்வொரு மட்டத்திலும், மற்றவர்களைபோல் சம அளவு பங்களிப்பை அளிக்கிறார். 
உயர் கல்வியில் தனது சமகால பாடத்திட்டங்கள் மூலம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் பலரை கவர்ந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே கற்பிக்கப்பட்டதை போன்ற உள் ஒழுங்குமுறை பாடங்களை புதிய கல்வி கொள்கை கொண்டுள்ளது. 'முதலாவது நாடுதான்' என்ற அழைப்பால், இந்நாட்டு இளைஞர்கள் நாட்டை முன்னேற்றுவதில் உறுதிபூண்டுள்ளனர். இளைஞர்களின் இந்த ஆசைக்கு, புதிய கல்வி கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு படிப்பில் பல முறை சேருவது, வெளியேறுவது என புதிய கல்வி கொள்கையில் உள்ள நடைமுறை, கல்வி தொடர்பாக மாணவர்கள் முடிவெடுப்பதை எளிதாக்கும். 
ஒட்டுமொத்த படிப்புக்கான கட்டணம் பற்றி கவலைப்படாமல், மாணவர்கள் முடிவெடுக்கும் சுதந்திரத்தை இது வழங்குகிறது. உயர் கல்வியில் இடங்களையும், மாணவர்களின் பதிவையும் அதிகரிக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நேரடி கல்வி அல்லது ஆன்லைன் கல்வி எதுவாக இருந்தாலும், இது அனைவருக்கும் சென்று ஒவ்வொருவரின் வாழ்வில் மாற்றங்களை உறுதி செய்வதற்கு அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, குறைவாக அறியப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வை, இந்த பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில், இங்குள்ள 100 விடுதிகள் கூடுதல் பணியாக மேற்கொள்ள வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்