குமரி கடலில் ‘புரெவி’ புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு வார காலமாக குளச்சல் பகுதி விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நில...
குமரி கடலில் ‘புரெவி’ புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு வார காலமாக குளச்சல் பகுதி விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் புயலின் அச்சம் நீங்கியதை அடுத்து விசைப்படகுகள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க சென்றன.
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில் புரெவி புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து குளச்சல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரைதிரும்பினர். இதுபோல் 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் குளச்சலில் கடந்த ஒரு வாரமாக மீன்வரத்து மிகக்குறைவாக இருந்தது. இந்நிலையில் ‘புரெவி’ புயல் இலங்கையில் கரையை கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்தது. இதனால் குமரியில் காற்றும், மழையும் இல்லாமல், லேசான தூறல் மட்டும் இருந்தது.
குமரியில் புயல் அச்சம் நீங்கியதை அடுத்து விசைப்படகுகளும், கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்துறை அறிவித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை முதல் குளச்சலில் விசைப்படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
No comments