வறுமையின் பிடியில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டுள்ளது. கள...
வறுமையின் பிடியில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டுள்ளது. களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார்.

கூலி தொழிலாளி. இவரது மனைவி சிந்து கலா. மாற்றுத்திறனாளி. தம்பதிக்கு சிவபிரசாத் (18), நயனா (15), நந்தனா (15) என மூன்று பிள்ளைகள் உண்டு. இதில் இரண்டு பெண்குழந்தைகளும் இரட்டை பிறவிகள். மூன்று பிள்ளைகளும் மாற்றுதிறனாளிகள். ஸ்ரீகுமார் கூலிவேலை செய்து மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்கள் வசித்து வந்த குடிசைவீடு கனமழையால் இடிந்தது.
வங்கியில் கடன் பெற்று வீடு கட்டினார். இந்நிலையில் திடீரென அவரது மனைவி சிந்துகலாவுக்கு முதுகெலும்பு பாதிப்பு ஏற்பட்டு ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கியில் கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை ஏற்பட்டதால் வீட்டை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால், மாற்றுத்திறனாளி பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் தெருவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என இவர் அஞ்சினார்.
ஒருபுறம் கொரோனா கொடுமையால் வேலை இழப்பு மற்றும் வறுமை, மறுபுறம் வங்கி நிர்வாகத்தின் மிரட்டல் என பாதிக்கப்பட்ட ஸ்ரீகுமார் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என கோரிக்கை மனு அளித்தார். இது தொடர்பாக கடந்த 31-ம் தேதி தினமலரில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், அசிஸ்டெண்ட் கலெக்டர் (பயிற்சி) ரிஷப் ஆகியோர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் மாவட்ட அளவிலான ஆய்வு குழுவின் பரிந்துரையின்படி, வயதுவரம்பு தளர்வு செய்து மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணைகளை விளவங்கோடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அனில்குமார் ஸ்ரீகுமாரின் பிள்ளைகள் மாற்றுத்திறனாளிகளான சிவபிரசாத், நந்தனா, நயனா ஆகிய மூன்று பேருக்கும் வழங்கினார். இந்த உதவித்தொகை ஆணைகள் வழங்கப்பட்டதற்கு மாவட்ட கலெக்டர், அசிஸ்டெண்ட் கலெக்டர், சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் ஆகியோருக்கு ஸ்ரீகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீட்டை ஏலம் விடுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
















No comments