மார்த்தாண்டம் அருகே பல ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏ...
மார்த்தாண்டம் அருகே பல ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருமனை அருகே தேவிகோடு ஆயவிளை பகுதியை சேர்ந்தவர் மோகனன். இவரது மனைவி சிந்து. தம்பதியின் மகள் வேதிகா மோகன் (20). மோகனன் அண்மையில் உயிரிழந்தார். இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள்.
வேதிகா மோகன் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார். பட்டியலின சாதி சான்றிதழ் கிடைக்காததால் இவருக்கு தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதைதொடர்ந்து ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பி.எஸ்.சி. நர்சிங் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார்.
சாதி சான்றிதழ் கேட்டு வில்லேஜ் ஆபீஸ், தாலுகா ஆபீஸ், கோட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் ஆபீஸ் என அனைத்து அலுவலகங்களுக்கும் பல ஆண்டுகளாக அலைந்தும் இவருக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதைதொடர்ந்து வேதிகா மோகன் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேதிகா மோகனின் தாயார் சிந்து கூறியதாவது:= நாங்கள் தாழ்த்தப்பட்ட இந்து சேரமர் வகுப்பை சேர்ந்தவர்கள். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனது மகளுக்கு தாழ்த்தப்பட்ட சாதி சான்றிதழ் தராமல் வருட கணக்காக இழுத்தடிக்கின்றனர். எனது பகுதியை சேர்ந்த சிலரது தூண்டுதலால் அதிகாரிகளும் எங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
இதனால், அவளது படிப்பும், எதிர்காலமும் முடங்கி போய் உள்ளது. இதனால், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். எங்களுக்கு சாதி சான்றிதழ் தர கோர்ட் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதால் எனது மகளை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என அவர் கூறினார்.
















No comments