பூதப்பாண்டி அருகே மகன் தாக்கப்பட்டதை தடுக்கச் சென்ற பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத...
பூதப்பாண்டி அருகே மகன் தாக்கப்பட்டதை தடுக்கச் சென்ற பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே எட்டாமடை மேலப்பிளவக்கல் பகுதியை சேர்ந்தவர் ஏங்கின். இவருடைய மனைவி முருகம்மாள் என்கிற வனஜா (வயது 60). இவர்களுக்கு வின்சி (32) என்ற மகளும், வினு என்ற மகனும் உள்ளனர். வின்சி அதே பகுதியை சேர்ந்த மதன் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வின்சிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வின்சி கணவரை விட்டு பிரிந்து சென்றார். அப்போது வின்சியுடன் மகனும், கணவர் மதனுடன் மகளும் சென்றனர்.
இந்நிலையில், மதனின் மகள் தனது பாட்டியை பார்த்து வருவதாக கூறி வனஜாவின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கேயே இருந்துவிட்டார். நேற்று முன்தினம் இரவு மதன் மகளை தேடி தனது மாமியார் வனஜா வீட்டுக்கு சென்றார். அங்கு வனஜாவின் மகன் வினு வீட்டில் இருந்தார். அப்போது, மதனுக்கும் வினுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மதனின் சகோதரர்கள் சுதன், மணிகண்டன் மற்றும் உறவினர் மணிகண்டன் ஆகியோர் வனஜா வீட்டுக்கு விரைந்தனர். அங்கு 3 பேரும் சேர்ந்து வினுவை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த வனஜா அவர்களை தடுக்க முயன்றார்.
ஆத்திரமடைந்த சுதன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து வனஜாவை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த வனஜா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வனஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதன், மணிகண்டன் மற்றொரு மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மகன் தாக்கப்பட்டதை தடுக்கச் சென்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments