அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய ராணுவ வீரர்கள், நாகர்கோவிலில் பயணியர் நிழற்குடையை சுத்தம் செய...
அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய ராணுவ வீரர்கள், நாகர்கோவிலில் பயணியர் நிழற்குடையை சுத்தம் செய்தனர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு சார்பில் தக்கலை டி.எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து நாகர்கோவில் வரை ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதில் விடுமுறையில் உள்ள ராணுவ வீரர்கள் 80 க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலத்தை தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வலம் நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பை அடைந்தது. அங்கு ராணுவ வீரர்கள் அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செட்டிக்குளம் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் உள்ள பயணியர் நிழற்குடையை சுத்தப்படுத்தி வண்ணம் தீட்டினர்.
மேலும் சமீபத்தில் இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் நடந்த உலக மூத்தோர் தடகள போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் பெற்ற நாகர்கோவில் புன்னைநகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக் வீரர் செல்வராஜுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சிவதாணுவுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
















No comments