சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் தை திரு விழாவின் 8-ம் நாளை முன்னிட்டு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும...
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் தை திரு விழாவின் 8-ம் நாளை முன்னிட்டு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத்திருவிழா கொடியேற்றம் கடந்த 14-ம் தேதி நடந்தது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 4 மணிக்கு அய்யா கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் தலைமைப் பதியின் முன்பு இருந்து கலி வேட்டைக்குப் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை வகித்தார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்து குடைகள் மேள தாளங்கள் முன் செல்ல வாகனம் கலி வேட்டைக்கு புறப்பட்டது.
தலைமை பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் தலைமைபதியை சுற்றி வந்து வடக்கு வாசல் பகுதிக்கு சென்றது. அங்கிருந்து முத்திரிகிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு அய்யா வழி பக்தர்கள் முன்னிலையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாகனம் செல்லும் வழிகளில் அப்பகுதி மக்கள் அய்யாவுக்கு சுருள் படைத்து வழிபட்டனர்.
பக்தர்களின் சுருள்ஏற்பு நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வாகனம் இரவு 9 மணிக்கு தலைமைப் பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தடைந்தது. அங்கு அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு தவக்கோல காட்சி அளித்தார்.
வாகன பணிவிடைகளை ஜன.யுகேந்த், ஜனா. வைகுந்த், பையன் நேம்ரிஷ் ஆகியோர் செய்தனர். பின்னர் வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது.
விழாவின் 9-ம் நாளான இன்று காலை, மாலை பணிவிடையும் இரவு அய்யா வைகுண்டசாமி அனுமன் வாகனத்தில் தெருவீதி வலம் வருதலும், நாளை நடைபெறும் 10-ம் திருவிழாவில் இரவு இந்திர வாகனத்தில் அய்யா பவனி வருதலும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
வருகிற 24-ம் தேதி திங்கள்கிழமை காலை 11-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் நடக்கிறது.
















No comments