தென்தாமரைகுளம் அருகே வீட்டு மாடியில் முருங்கைக்காய் பறிக்க முயன்ற இளம்பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். தென்தாமரைகுளம் அருகே விஜயநகரியை...
தென்தாமரைகுளம் அருகே வீட்டு மாடியில் முருங்கைக்காய் பறிக்க முயன்ற இளம்பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

தென்தாமரைகுளம் அருகே விஜயநகரியை சேர்ந்த தங்கதுரை மனைவி அம்மாபழம் (வயது 56). தங்கதுரை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் செல்வ அஜிதா (வயது31). இவருக்கும் அகஸ்தீஸ்வரம் அருகே கருங்குளத்தான் விளையைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ராஜன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்திற்கு பின்பு செல்வ அஜிதா கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் விஜயநகரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். நேற்று காலையில் சமையல் செய்வதற்காக முருங்கைக்காய் பறிக்க தங்களது வீட்டின் மாடிக்கு சென்றார். மாடியில் நின்றபடி அருகில் நின்ற முருங்கை மரத்தில் உள்ள முருங்கை காயை பறிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வ அஜிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முருங்கைகாய் பறிக்க முயன்ற இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments