பஞ்சாப்பில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிராமத்தில் மசூதி கட்ட உதவி செய்துள்ளனர் மற்ற மதத்தைச் சேர்த்த மக்கள். இந்த செயல் நெகிழ்...
பஞ்சாப்பில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிராமத்தில் மசூதி கட்ட உதவி செய்துள்ளனர் மற்ற மதத்தைச் சேர்த்த மக்கள். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் நிகழ்ந்தது மோகாவில் உள்ள பூலார் என்ற கிராமத்தில் தான். இந்த கிராமத்தில் ஏழு குருத்வாராக்கள் மற்றும் இரண்டு கோயில்கள் உள்ளன. ஆனால் மசூதி இல்லை.
இந்த நிலையில் தான் மசூதி கட்ட முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு எடுக்க காரணம் அந்தக் கிராமத்தில் வசிக்கும் நான்கு இஸ்லாமிய குடும்பம் தான். 1947 பிரிவினைக்கு முன்பு இந்தக் கிராமத்தில் மசூதி இருந்துள்ளது. ஆனால் அது காலப்போக்கில் சிதைந்துவிட, இஸ்லாமியர்கள் அவதிப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற இருந்த நிலையில் தான் மக்கள் ஒன்றுகூடி மசூதி கட்டித்தருவது என்ற முடிவை எடுத்துள்ளனர். மசூதி கட்டுவதற்காக ரூ.100 முதல் ரூ 1 லட்சம் வரை அனைத்து கிராம மக்களும் பங்களிப்பு செய்து ஒத்துழைத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மசூதி அடிக்கல் நாட்டு விழா நடத்த இருந்த நிலையில் அங்கு பெய்த பலத்த மழை காரணமாக விழா தடைபட்டுள்ளது.
பின்னர் கிராமவாசிகள் விழா நடைபெறும் இடத்தை அருகிலுள்ள குருத்வாராவுக்கு மாற்ற வேண்டும் என்று மாற்றி, விழாவிற்கு வந்தவர்களுக்கு குருத்வாராவில் வைத்து லங்கர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். சீக்கிய மற்றும் இந்து சமூகத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர். லங்கர் முடித்த பின், மசூதி காட்டும் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க அனைவரும் குருத்வாராவில் பிரார்த்தனை செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்த கிராமத்தைச் சேர்ந்த சர்பஞ்ச் பாலா சிங் என்பவர், "1947-ல் பிரிவினைக்கு முன்னர் இங்கு ஒரு மசூதி இருந்தது. ஆனால் அது காலப்போக்கில் இடிந்து விழுந்தது. இதனால் இங்குள்ள நான்கு இஸ்லாமிய குடும்பங்கள் வெளியேற நினைத்திருந்தனர்.
எங்கள் கிராமத்தில் இணக்கமாக வாழும் இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய குடும்பங்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், இஸ்லாமிய குடும்பங்களுக்கும் வழிபாட்டுத் தலம் இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம். அதன்படி, மசூதி முன்பு இருந்த நிலத்தில் மீண்டும் கட்டப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
No comments