குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே முட்டத்தை சேர்ந்தவர் பனிப்பிச்சை, மீனவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகலா (வயது 32) என்பவருக்கும் ...
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே முட்டத்தை சேர்ந்தவர் பனிப்பிச்சை, மீனவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகலா (வயது 32) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 17 -ம் தேதி மேகலா வீட்டில் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக பனிப்பிச்சை உறவினர்களிடம் கூறினார். இதை நம்பிய உறவினர்கள் ஊர் வழக்கப்படி கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மேகலாவின் சகோதரர் அந்தோணியடிமை வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மேகலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசாரின் சந்தேக பார்வை மேகலாவின் கணவர் பனிச்பிச்சை மீது திரும்பியது. அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மேகலா கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.
கொலை செய்யப்பட்ட மேகலாவின் உறவினர் பெண்ணுக்கு 16 வயது ஆகிறது. அந்த சிறுமி அடிக்கடி மேகலா வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது பனிப்பிச்சைக்கு சிறுமி மீது மோகம் ஏற்பட்டது. அவளை அடைய வேண்டும் என பல முறையில் முயற்சி செய்து வந்ததாக தெரிகிறது. கணவனின் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட மேகலா அவரை கண்டித்தார். அதை பொருட்படுத்தாமல் சிறுமியை அடைவதில் தீவிரமாக இருந்தார். இதற்கு மேகலா தடையாக இருப்பதால் அவரை கொலை செய்யும் எண்ணம் உருவானது. அதற்கான திட்டத்தை பனிப்பிச்சை வகுத்தார்.

கடந்த மாதம் 17-ம் தேதி இரவு இந்த பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பனிப்பிச்சை மேகலாவை அடித்து கொலை செய்தார். பின்னர், எதுவும் தெரியாதது போல் மனைவி நோய்வாய்பட்டு இறந்ததாக உறவினர்களிடம் கூறி நாடகமாடியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் ெதரிய வந்தது. இதையடுத்து பனிப்பிச்சையை போலீசார் கைது செய்தனர். மேலும், மேகலாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, அடக்கம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று மாலை கல்குளம் தாசில்தார் ஜெகதா முன்னிலையில் மேகலாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் பெருமாள், குளச்சல் வருவாய் ஆய்வாளர் ரோஸ்லெட் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments