மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் சவேரியார் தெருவை சேர்ந்தவர் லாசர் மகன் லெனின் (வயது 33). இவர் அப்பகுதியில் உள்ள பாத்திமா தெருவில் செல்போ...
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் சவேரியார் தெருவை சேர்ந்தவர் லாசர் மகன் லெனின் (வயது 33). இவர் அப்பகுதியில் உள்ள பாத்திமா தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை கடையை திறக்க சென்றார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, விலை உயர்ந்த 10 செல்போன்கள், மேஜையில் வைத்திருந்த பணம் ஆகியவை மாயமாகி இருந்தன. நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
பின்னர், இதுகுறித்து லெனின் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் ஆகியோர் சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடியப்பட்டணம் ஜாண்பால் தெருவை சேர்ந்த மீனவரான வினிசாபி பெமின் (31) என்பவர் தனது ‘சிம்கார்டை‘ திருட்டு போன செல்போன் ஒன்றில் போட்டார். இதையடுத்து அவரது முகவரி விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று வினிசாபி பெமினை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் லெனின் கடையில் திருடியதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 செல்போன்கள் மற்றும் ரூ.22 ஆயிரத்தையும் மீட்டனர்.
செல்போன் கடையில் நடந்த திருட்டு சம்பவத்தில் மீனவர் கைதானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments