குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார். அவரை டாக்டர்களும், நர்சுகளும் உற்சாகமாக கைதட்டி வழியனுப்பி வைத்தனர். குமரி ம...
குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார். அவரை டாக்டர்களும், நர்சுகளும் உற்சாகமாக கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.

முதன் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவருக்கு கொரோனா இல்லை என்பது 2 முறை நடந்த பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தினர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் வீட்டுக்குச் செல்ல மறுத்து தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே இருந்து வருகிறார்.

அதன்படி நேற்று மாலை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையம் அருகில் கொரோனாவில் இருந்து மீண்ட தேங்காப்பட்டணத்தை சேர்ந்தவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவருக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி பழங்கள் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டீன் ராதாகிருஷ்ணன், ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், குணமடைந்த நோயாளியின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வழியனுப்பு நிகழ்ச்சியின்போது டாக்டர்களும், நர்சுகளும் கை தட்டி ஆரவாரம் செய்து, அவரை உற்சாகமாக வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். அவரும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டுக்கு சென்றபிறகு 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறினர். கொரோனாவில் இருந்து காப்பாற்றியதற்கு அவர் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
குமரி மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் முதன் முதலாக வீடு திரும்பியவர் இவர் தான் ஆவார்.
No comments