மேலடுக்கு சுழற்சி, அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலான மழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய...
மேலடுக்கு சுழற்சி, அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலான மழை வாய்ப்பு உள்ளது என
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், தற்போது தென் தமிழகத்தில் குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்மேற்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக கன்னியாகுமரி குளித்துறையில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்ககடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2, 3 தினங்களில் மழை படிப்படியாக தீவிரமடையும். வங்கக்கடல், குமரி கடல் பகுதியில் மீனவர்கள் நாளை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழகம், கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், நாளை அதிதீவிர கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நாளை செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
கேரளா முழுவதும் குறைந்தது வெள்ளிக்கிழமை வரையிலாவது கனமழை தொடர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலகாடு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22-ம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலகாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறி முகாம்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது, ரெயில், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர், அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
















No comments