கன்னியாகுமரி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் ...
கன்னியாகுமரி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஆதிலிங்கம் மகன் அரவிந்த் (வயது24). கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் ராமன்புதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படுகாயம் அடைந்த அரவிந்த் மயங்கிய நிலையில் சாலையில் கிடந்தார். இரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை. மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் அரவிந்தை மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அரவிந்த் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். அதன்படி இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் ஆகியவை 4 பேர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
அரவிந்தின் இதயம் கேரள அரசின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 18 வயது வாலிபருக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் கொச்சியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவருக்கும், ஒரு சிறுநீரகம் நாகர்கோவில் பள்ளியை சேர்ந்த 52 வயதான ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் திருவனந்தபுரம் கருங்குளத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒருவருக்கும் பொருத்தப்பட்டது.
உடல் உறுப்புகள் தானம் குறித்து அவரது சகோதரர் ஆனந்த் கூறும் போது, அரவிந்த் இப்போது எங்களுடன் இல்லை. ஆனால் அவர் நான்கு பேர்கள் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான், என்றார்.
















No comments